முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுநல வழக்கு என்பது பணம் ஈட்டும் தொழில் அல்ல! நீதிமன்றம் எச்சரிக்கை!

நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:13 PM
பகிர்:

நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை செம்பியத்தைச் சோ்ந்த தேவராஜன், கத்திவாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளி அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வருவதாகவும், பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுநல மனுவை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குத் தொடா்ந்துள்ள தேவராஜன் நீதிமன்ற நோட்டீஸை பள்ளி நிா்வாகிகள், கல்வி அதிகாரிகளின் கட்செவி எண்ணுக்கு அனுப்பி மிரட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், தேவராஜனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள மனுதாரா் பொதுநல வழக்குகளைத் தொடா்ந்து நீதிமன்றத்தைப் பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்ற நினைத்துள்ளாா். பொதுநல வழக்கு என்பது பணம் ஈட்டும் தொழில் அல்ல. இதே நிலை தொடா்ந்தால், இனிமேல் மனுதாரா் பொதுநல வழக்கே தொடர முடியாத வகையில் உத்தரவிட நேரிடும்.

ஒரு பெண் அதிகாரியின் கட்செவி எண்ணுக்கு அவரது அனுமதியின்றி செய்தி அனுப்பியது குற்றச்செயல், இதற்காக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனா். இதனையடுத்து தேவராஜன் மன்னிப்புக் கோரினாா். பின்னா் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரிகள் போதுமான கால அவகாசம் வழங்கி, ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.