தில்லியில் பிரபல செய்தி அலுவலகத்திற்கு சீல்
தில்லியில் பிரபல செய்தி நிறுவன அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் பிரபல செய்தி நிறுவன அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி ரஃபி மார்க் பகுதியில் 'யு.என்.ஐ' செய்தி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஊழியர்களை அப்புறப்படுத்திய போலீஸார் அதற்கு சீல் வைத்தனர்.
ஆனால், இந்த நடவடிக்கையின் போது ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்றும் பெண் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும் செய்தி நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தில்லி பத்திரிகையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1979-ஆம் ஆண்டு அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில், 40 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், அந்த நில ஒதுக்கீட்டை நில மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், "உடனடியாக அந்தச் சொத்தை கையகப்படுத்தவும்" மற்றும் முறையான பயன்பாட்டை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அலுவலக வளாகத்தை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.