பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமியை நேரில் சென்று சந்தித்த முதல்வர்
தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.
புதுதில்லி: தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தையும் வழங்கினார்.
தில்லி புறநகரான பாசிம் விஹார் பகுதியில் நேற்று (புதன் கிழமை) மர்ம நபர்கள் சிலரால் 12 வயது சிறுமி கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து உயிருக்கு போராடி வரும் சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிறுமியை வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். காவல்துறை ஆணையரிடம் இது குறித்து பேசியுள்ளேன். குற்றவாளிகளை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
சிறுமி குறித்து அவர் பேசியதாவது, மருத்துவமனையில் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை சிறுமியை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே சிறுமியின் நிலை குறித்து கூற இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி விரைவில் நலமடைவார் என நம்புவோம் இவ்வாறு அவர் கூறினார்.