கரோனா: மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் சியாமள் சக்ரவர்த்தி மரணம்
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சியாமள் சக்ரவர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார்.
கொல்கத்தா: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சியாமள் சக்ரவர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார். 76 வயதான அவர், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
சி.பி.ஐ.(எம்). தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மாநில போக்குவரத்து அமைச்சருமான சியாமல் சக்ரவர்த்தி, கடந்த ஜூலை 29-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அல்ததங்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பிறகு வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றங்கள் காணப்பட்ட நிலையில், மீண்டும் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்திசைக்கவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று பிற்பகல் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது மரணம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பேசியதாவது, அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர் சியாமல் சக்ரவர்த்தி. அவர் மக்களுக்கான தலைவராக இருந்தார். உழைக்கும் மக்களின் நலனுக்காக மட்டுமே உழைத்துக்கொண்டிருந்தார். அவரது மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.