சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவக்கூடிய ஆபத்துள்ள 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
ஜெர்மனியிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கௌச் இன்ஸ்டிடியூட் இணைந்து விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள 4,000 விமான நிலையங்களின் பயணிகள் வருகை - புறப்பாடு ஆகிய பற்றிய புள்ளிவிவரங்களின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சீனாவிலிருந்து வெளியேறக் கூடிய வைரஸ் பாதித்தவர்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, கரோனா பரவக்கூடிய வாய்ப்பு, பெருமளவில் வைரஸ் பரவக் கூடிய தடங்கள், பரவும் வேகம் போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டது இந்த ஆய்வு.
ஆபத்துள்ள நாடுகளின் இந்தப் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஜப்பான் வருகிறது. இதைத் தொடர்ந்து, தென் கொரியா, ஹாங்காங், தாய்வான் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன.
வைரஸ் பரவும் ஆபத்துள்ள முதல் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறுகிறது. 17-வது இடத்தில் இந்தியாவும் 19-வது இடத்தில் அரபு நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் வைரஸ் வந்தடையக் கூடிய வழிகளின் பட்டியலில் புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் முன்வரிசையில் இருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் இடம் பெறுகின்றன.