மத்திய நிதிநிலை அறிக்கையில் நடுத்தர வகுப்பு மக்களை இலக்காகக் கொண்டு வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலத்துக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தைத் திருப்தி செய்யும் வகையில் வருமான வரியில் சில சலுகைகளை அறிவிப்பது பற்றி மத்திய நிதித்துறை அமைச்சகம் சிந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது தொடங்கி, நடுத்தர மக்களிடையே இந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ஏற்கெனவே, கடந்த செப்டம்பரில் பெருவணிக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
மக்களின் நுகர்வுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி குறைப்பு தொடர்பான பல்வேறு வாய்ப்புகளையும் மத்திய நிதித்துறை அமைச்சக அலுவலர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.