இலங்கையில் சிங்கள மக்கள்தான் வந்தேறு குடிகள்: சிங்கள அறிஞர்
இலங்கையில் சிங்கள மக்கள்தான் வந்தேறு குடிகள் என்று சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரான விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள மக்கள்தான் வந்தேறு குடிகள் என்று சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரான விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.
இதுபற்றித் தமிழக வழக்கறிஞரும் அரசியற் செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது:
"இலங்கை அரசியலில் விக்கிரமபாகு கருணாரத்தின மிகவும் முக்கியமானவர். சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வரும் அவர் நீண்ட கால நண்பரும்கூட.
திமுக சார்பில் தலைவர் மு. கருணாநிதி, டெசோ மாநாட்டை 2012-ல் நடத்த பொறுப்புக் கொடுத்தபொழுது, அந்த மாநாட்டுக்கு இவரை அழைத்தபோது மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நீங்கள் நண்பர் என்ற முறையில் அழைத்துவிட்டீர்கள். அவசியம் உங்களுக்காக மட்டும் வருகின்றேன் என்று மாநாட்டில் வந்து கலந்துகொண்டார்.
டெசோ மாநாட்டிற்கு சென்னைக்கு வர கொழும்பு காட்டுநாயக்க விமான நிலையம் வந்த போது ராஜபக்சே அரசு இவரைத் தடுக்க நினைத்தும் அதை மீறி சென்னைக்கு வந்தார்.
திரும்ப மாநாட்டை முடித்து கொழும்பு விமான நிலையத்தில் சென்று இறங்கியபோது இவரை சிங்கள அரசு தாக்கி கருப்புக் கொடியெல்லாம் காட்டப்பட்டது.
இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரரான விக்கிரமபாகுதான், நேற்று சிங்களவர்கள்தான் இலங்கையில் வந்தேறிகள் என்ற கருத்தினைக் கொழும்பு நகரில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரங்களில் ஒன்றாக ஈழத் தமிழ் இந்துக்கள் கொண்டாடும் கோணேஸ்வரத்தைத் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்குகள் கூறுகிறார்கள்.
இராவணன் ஒரு முஸ்லிம். எனவே கோணேஸ்வரம் தங்களுடையது என முஸ்லிம் உலமாக் கட்சி கூறுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில்தான் சிங்களத் தலைவரான விக்கிரமபாகு கருணாரத்தின, “ சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் அதைத் தம்மால் நிரூபிக்க முடியும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
விக்கிரமபாகுவின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது!" என்று தெரிவித்துள்ளார் கே. எஸ். ராதாகிருஷ்ணன்.