ஆலயங்களைத் திறக்கக் கோரி ஹிந்து முன்னணி போராட்டம்
தமிழகத்தில் உள்ள ஆலயங்களை வழிபாட்டுக்காகத் திறக்கக் கோரி ஹிந்து முன்னணி சார்பில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) ஒற்றைக்காலில் பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: தமிழகத்தில் உள்ள ஆலயங்களை வழிபாட்டுக்காகத் திறக்கக் கோரி ஹிந்து முன்னணி சார்பில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) ஒற்றைக்காலில் பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கரோனா நோய்த் தொற்று பொதுமுடக்க காலத்தில் தற்போது மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதனடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்காமல் உள்ளது.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற அனைத்து மத பிரதிநிதிகளின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பக்தர்கள் நினைத்தும் நடக்கவில்லை. ஆலயங்களைத் திறந்தால் கரோனா பரவிவிடும் என்று அச்சமாக இருக்கலாம் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் ஆலயங்களைவிட அதிகமாக கரோனா நோய்த் தொற்று பரவக் காரணமாக இருக்கக்கூடிய இடங்களுக்கும், தொழில்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக டாஸ்மாக் போன்றவற்றுக்கு பொது முடக்கத்தில் இருந்து தமிழக அரசு தளர்வு அளித்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதிலும் ஆலயங்களின் முன்பாக ஜூன் 10 ஆம் தேதி ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்."