சீர்காழி: சீர்காழியை அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சி கடுக்காமரம் கிராமத்தில் தொகுப்பு வீடு இடிந்து வெள்ளிக்கிழமை பலத்த சேதம் ஏற்பட்டது.
கோபாலசமுத்திரம் ஊராட்சி கடுக்காமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்சம்(60) அதே ஊரைச் சேர்ந்த ராம்மூர்த்தி(59) ஆகியோருக்குச் சொந்தமான தொகுப்பு வீடுகள் இரு தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் திடிரென வீட்டின் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழுந்தது. வீடு முழுவதும் தரைமட்டமானது. பகல் பொழுதில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர்சேதம் ஏதுமில்லாமல் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றிய குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு உணவுப்பொருள், ரூ.1000 நிதி உதவி வழங்கி, வீடுகளை இழந்த இருவருக்கும் அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஆறுதல் கூறினார்.
அப்பொழுது முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் மாவட்ட கவுன்சிலர் விஜயபாரதி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.