மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாளுவன் ஆற்றை தூர்வாரக் கோரி, விவசாயிகள் ஆற்றில் இறங்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தினர்.
மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஒன்றியம் வேதபுரத்தில் கோரையாற்றிலிருந்து சாளுவன் ஆறு பிரிகிறது. ஆற்றின் தண்ணீரை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. வேதபுரத்திலிருந்து 15 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த ஆற்றின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. பின்னர் இந்த ஆறு திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்புலத்தில் சென்றடைகிறது. அங்கிருந்து மரக்காகோரையாறு என்ற பெயரில் ஓடுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக சாளுவன் ஆறு தூர்வாரப்படாமல் இருந்து வந்ததால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்வதில் தேக்கம் ஏற்படுட்டதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த ஆற்றினை தூர்வார வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், சாளுவன் ஆற்றை தூர்வாருவதற்காக, குடிமராமத்துப்பணியின் கீழ் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
காவிரி மற்றும் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் சாளுவன் ஆற்றில் தண்ணீர் வரவுள்ள நிலையில், தூர்வாரும் பணி நடைபெறாததை கண்டித்து, உடனடியாக தூர்வாரும் பணியை தொடங்கிட வலியுறுத்தி சாளுவன் ஆறு பாசன விவசாயிகள் சார்பில், மீனம்பநல்லூரில் சாளுவன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடைபெற்றது .
போராட்டத்திற்கு, தி மு க முன்னாள் எம்.பி.யும், கட்சியின் மாநில விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார். இதில், கோட்டூர் ஒன்றிய திமுக செயலர் பால ஞானவேல், சிபிஐ ஒன்றியச் செயலர் க.மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவர் மு. மணிமேகலை மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.