திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 60 ஆட்டுக்குட்டிகள் தீயில் எரிந்து கருகின.
திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த செல்லப்பா மகன் சந்தனகுமார் (31). இவர், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வந்தார். பகல் நேரங்களில் மேயச்சலுக்கு அழைத்துச் செல்வதுடன், இரவு நேரங்களில் மைதானங்கள், வயல்களில் கிடை போட்டு பாதுகாப்பது வழக்கமாம். பெரிய ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது குட்டிகளை அதற்கென பனைஓலை கூரையுடன் தயாரிக்கப்பட்டுள்ள கூண்டுகளில் அடைத்துச் செல்வது வழக்கம். அதன்படி ரெட்டியார்பட்டி பகுதியில் 3 கூண்டுகளில் சுமார் 60 ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு மேய்ச்சலுக்கு பெரிய ஆடுகளை அழைத்துச் சென்றிருந்தாராம்.
இந்நிலையில் அப்பகுதி புற்களில் இன்று பிடித்த தீ மளமளவென ஆட்டுக் கூண்டுகளுக்கும் பற்றியது. இதில் 60 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1.25 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் பெருமாள்புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.