மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 42 பேர் எட்டயபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, எட்டயபுரம் பாரதி நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விடுதி கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்...
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விடுதிக் கட்டடத்தில் மருத்துவ கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் சாங்கிலி எனும் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை இரவு மகாராஷ்டிர மாநில அரசு பேருந்துகள் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு சேலம் வந்தடைந்த 600 பேர் ஒவ்வொரு மாவட்டவாரியாக பிரிக்கப்பட்டு தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 பேர் சேலத்திலிருந்து அரசு பேருந்தில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தடைந்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விடுதி கட்டடத்தில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் கலா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் நடவடிக்கை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.