கரோனா: தூத்துக்குடியில் பெண் பலி
தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்களில் போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான இந்தப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
Advertisement
உயிரிழந்த இந்தப் பெண் வசிக்கும் தெருவிலுள்ள ஒருவர் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். அருகிலுள்ள கடைக்குச் சென்றுவந்தபோது அவரிடமிருந்து இந்தப் பெண்ணுக்கு நோய் தொற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இவரது மகனும் மருமகளும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மருமகள் தனியார் மருத்துவமனையொன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த மரணம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.