நியு யார்க்கில் சடலங்களை ஒரே இடத்தில் மொத்தமாகப் புதைக்கும் அவலம்
அமெரிக்காவில் நியு யார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள்.
அமெரிக்காவில் நியு யார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள்.
கரோனா நோய்த் தொற்றால் வேறெந்தவொரு நாட்டையும்விட மிக அதிக அளவில் அமெரிக்காவில் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இறந்தவர்களைத் தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்துப் புதைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை, ஆள்களும் இல்லை.
Advertisement
எனவே, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கிறார்கள்.
நியு யார்க் நகரில் இறந்தவர்களில் ஏராலணானோரின் சடலங்கள், பிராங்ஸை ஒட்டியுள்ள ஹார்ட் தீவில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களைப் புதைக்கும் பகுதியில் பெரிய பள்ளங்களை வெட்டிப் புதைக்கின்றனர்.
சவக் குழியில் ஏணி வைத்து ஏறி இறங்குவதைக் காட்டுகிற - சவ அடக்கம் நடந்துகொண்டிருப்பது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகி அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில்தான் ஆதரவற்றோர், இறுதிச் சடங்கைச் செய்ய இயலாத குடும்பத்தைச் சேர்ந்தோரின் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம்.
படகில் மட்டுமே செல்லக் கூடிய இந்தத் தீவு கல்லறையில் மிகக் குறைவான ஊதியத்தில் சிறைக் கைதிகளே பணியாற்றுகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரையிலும் கரோனா நோய்த் தொற்றால் 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4,68,895.