கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை பரவத் தொடங்கி உள்ள நிலையில், அதனை எதிர்க்கொள்ள கபசுரக் குடிநீர் அவசியம் என்று சித்த மருத்துவர் பி. வசந்தகுமார் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம், திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில், ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை மூலமாக பொதுமக்களுக்கு முகக்கவசம் அணியும் முறை, சோப்பு கொண்டு கை கழுவும் முறை, கரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பான விளக்க கண்காட்சியென பல்வேறு விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில், கபசுரக் குடிநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு, மருத்துவ அலுவலர் தி.தீபக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், சித்தமருத்துவர் பி. வசந்தகுமார் பங்கேற்று, பேசுகையில் தற்பொழுது கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை பரவத் தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் கையில் எடுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கபசுரக் குடிநீர் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதாவது ஏற்கனவே கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பலருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் கபசுரக் குடிநீரின் பங்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.
மேலும் அமக்கராச் சூரணம் மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம் உள்ளிட்டவையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றை மக்கள் சரியான விகிதத்தில் உண்டு வந்தாலே போதுமானது என்றார் அவர்.
உடன் மருத்துவர் வீ.திவாகர், சித்த மருத்துவ மருந்தாளுநர் ர.ராமகிருஷ்ணன், செவிலிய கண்காணிப்பாளர் ஜூலியட் உள்ளிட்ட மருத்துவமணை பணியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.