உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் 4 மாநிலங்களிலும் தேர்தல் நடந்தாலும் உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | பஞ்சாப் தேர்தல்: பாஜகவுடன் கைகோர்த்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர்
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 30 நாள்களில் மட்டும் 3 முறை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த 10 நாள்களில் மேலும் 4 சுற்றுப்பயணங்களை மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022 தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். டிசம்பர் 18ஆம் தேதியன்று ஷாஜஹான்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் மோடி டிசம்பர் 21 அன்று பிரயாக்ராஜுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 621 பேருக்கு கரோனா
டிசம்பர் 23 ஆம் தேதி தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு செல்லும் மோடி விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்கிறார். மேலும் டிசம்பர் 28 அன்று கான்பூர் மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ள மோடி அதனைத் தொடர்ந்து ஐஐடி-கான்பூர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பிரதமரின் அடுத்தடுத்த பயணங்கள் உத்தரப்பிரதேச தேர்தலை மையமாகக் கொண்டது என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.