கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஒருவர் கூட மலக்குழிகளை சுத்தம் செய்யும்போது இறக்கவில்லை எனும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்த பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் 9ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதையும் படிக்க | கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி: முன்னிலையில் தமிழ்நாடு
இந்நிலையில் மலக்குழி மரணங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும் செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தபோது மரணங்கள் பதிவாகியுள்ளாதாக அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கரோனா அவசரநிலை அறிவிப்பு
கையால் மலம் அள்ளுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013ன் படி கைகளால மலம் அள்ளுவதால் ஏற்படும் மரணங்களைக் குறிப்பிட வேண்டிய மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கைகளால் மலக்குழி மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது 340 பேர் பலியானதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது ஒருவர் கூட மரணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.