மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் சனிக்கிழமை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கீழடி மற்றும் அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்த காரணத்தால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக கடந்த மே மாதம் 8 -ஆம் தேதி முதல் கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கீழடி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்து அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டனர்.
மேலும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பார்வையிட்டனர்.
கீழடியில் அமைய உள்ள அருங்காட்சியக திட்டப் பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் பணிகள் குறித்தும் அப்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் பற்றியும் அமைச்சர்களிடம் விளக்கிக் கூறினர்.
இந்த ஆய்வின்போது மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்,மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத் தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்