முகப்பு
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கை 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடா்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வகுகிறது. புதன்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 நாள்களாகவே, தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் பயனாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

நாட்டில் தொற்றுக்கு  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,65,432 ஆக உள்ளது.  70 நாள்களுக்குப்பிறகு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 47,946 குறைந்துள்ளது.  

கடந்த 34 நாள்களாக தினசரி தொற்று பாதிப்பைவிட தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.  தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,404 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,83,88,100-ஆக உயர்ந்துள்ளது. தேசியளவில் குணமடைந்து வருபவர்களின் வீதம் 95.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி வீதம் 5 சதவிகிதத்தில் இருந்து 4.17 சதவீதமாக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 2,542 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,79,573 போ் உயிரிழந்துள்ளனர். 

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 19,30,987 பரிசோதனைகளும், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 38,33,06,971 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,00,458  பேருக்கு தடுப்பூசிகளும், நாடு முழுவதும் இதுவரை 36,17,099  தடுப்பூசி மையங்கள் மூலம் 26,19,72,014 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.