திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ள கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் மாரியப்பன்(32). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வந்த மாரியப்பன் வீட்டிலிருந்து நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை புதன்கிழமை அதிகாலை தேடியபோது ஒரு கோயில் வளாகம் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் மாரியப்பன் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.