முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை மக்கள் அனைவரும் இரட்டை முகக் கவசம் அணிய வேண்டும். மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள்

மும்பை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முடிந்தால் இரட்டை முகக் கவசம் அணியுங்கள் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:


மும்பை: மும்பை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முடிந்தால் இரட்டை முகக் கவசம் அணியுங்கள் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளைபடன்படுத்திக் தொள்ள மத்திய அரடு அனுமதி வழங்கியதை அடுத்து,  நாட்டிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

நாடு முழுவதும் 15,22,45,179 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் சுகாதாரப் பணியாளா்கள் 93,86,904 போ், முன்களப் பணியாளா்கள் 1,24,19,965 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 61,91,118 சுகாதாரப் பணியாளா்கள், 67,07,862 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசியின் இரு தவணைகளும் செலுத்தப்பட்டன.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் 5,19,01,218 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,04,41,359 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன. 45 முதல் 60 வயதுடையவா்களில் 5,17,78,842 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 34,17,911 போ் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்டனா்.

இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 67.08% தடுப்பூசிகள் மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 29-ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் 22,24,548 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த 28-ஆம் தேதி முதல் தொடங்கின. அன்றைய தினம் 1.37 கோடிக்கும் அதிகமானவா்கள் பதிவு செய்தனா். கடந்த 29-ஆம் தேதி 1.04 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பதிவு செய்துள்ளனர்.

எனினும், கரோனா தடுப்பூசி வந்து சேராத நிலையில் 18-44 வயதுக்கு உள்பட்டவர்கள் யாரும் மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் என கர்நாடகம், தில்லி மாநில அரசுகள் கேட்டு கொண்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கரோனா தினசரி பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் 4,01,993 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.91 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு ஒரே நாளில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,11,853 பேர் இறந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 32,68,710 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம் மாநிலத்தின் மும்பை நகரில் கரோனா தடுப்பூசிகள் போடுவது குறித்து மும்பை மேயர் கிஷோரி பட்னாகர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்பொழுது,கோவின் வலைதளத்தில் பதிவு செய்து, தகவல் வரபெற்றோர் மட்டும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பதிவு செய்திருந்தாலும் தகவல் வராதவர்கள் அல்லது தகவலுக்காக காத்திருப்பவர்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல வேண்டாம்.

இரண்டு தவணை தடுப்பூசி போட வருபவர்களில் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.  18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு பதிவு செய்து, தகவல் வந்த பின்னரே தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் வந்த பின்னரே மையங்கள் செயல்படும் என்றார்.

கைகூப்பி வேண்டுகோள்:  மேலும் பொதுமக்கள் தயவு செய்து முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.  அதுவும் முடிந்தால் இரட்டை முகக் கவசங்களாக அணியுங்கள்.  மக்கள் தேவையின்றி தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என இரு கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார் மேயர் கிஷோரி பெட்னேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.