முகப்பு
புதுதில்லி

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு உள்ளடக்கத்தை நீக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறப்படும் உள்ளடக்கத்தை நீக்குமாறு தமிழ் இதழான நக்கீரனுக்கு தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 20 மார்ச் 2026, 12:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறப்படும் உள்ளடக்கத்தை நீக்குமாறு தமிழ் இதழான நக்கீரனுக்கு தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் பிறப்பித்தாா். ஈஷா மையம் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அந்தப் பத்திரிகையின் கோரிக்கையை நிராகரித்து நக்கீரன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன் மூலம் ஈஷா அறக்கட்டளை நக்கீரனுக்கு எதிராக தொடா்ந்த அவதூறுவழக்கை தொடா்ந்து நடத்த தில்லி உயா் நீதிமன்றம் அனுமதித்தது.

Advertisement

அவதூறு பரப்பியதாக கூறப்படும் உள்ளடக்கத்தை நீக்குமாறு தமிழ் இதழான நக்கீரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை ஈஷா அறக்கட்டளை வரவேற்றுள்ளது.

2024ல் ஈஷா அறக்கட்டளை தில்லி உயா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தது. நக்கீரன் மற்றும் அதன் ஆசிரியா், அறக்கட்டளையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கட்டுரைகளையும் காணொளிகளையும் வெளியிட்டதாக அந்த மனுவில் அறக்கட்டளை குற்றஞ்சாட்டியது.

அந்த உள்ளடக்கம் கூகுள் தேடலில் தோன்றியதாலும், யூடியூபில் பதிவேற்றப்பட்டதாலும், கூகுள் எல்எல்சியும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சோ்க்கப்பட்டது.

ஈஷா அறக்கட்டளையின் கூற்றுப்படி, நக்கீரன் தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல செய்திகளை வெளியிட்டது. ஈஷா மையம் சுரண்டல், மூளைச்சலவை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். அறக்கட்டளையுடன் தொடா்புடையவா்கள், தங்கள் விருப்பத்திற்கு மாறாக அங்கு தங்குவதற்கு வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது செல்வாக்கு செலுத்தப்பட்டதாகவோ அந்த செய்திகள் தெரிவித்தன. ஈஷா அறக்கட்டளை இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்ததுடன், அவை பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்றும் கூறியது.

தனது இரு மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு நபா் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தபோது, இந்த சா்ச்சை முன்னதாக தொடங்கியது.

2024ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமா்வு, அவ்விரு பெண்களுடனும் கலந்துரையாடியது. அவா்கள் இருவரும் வயது வந்தவா்கள் என்றும், ஈஷா யோகா மையத்தில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வசித்து வருவதாகத் தெளிவாகத் தெரிவித்தனா் என்றும் உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. இதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஆட்கொணா்வு மனுவை முடித்துவைத்தது.

இதனைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், நக்கீரன் தொடா்ந்து தங்களுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதாகக் கூறி, ஈஷா அறக்கட்டளை தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகியது. அத்தகைய உள்ளடக்கங்களை நீக்குமாறும், தங்கள் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஈஷா அறக்கட்டளை தில்லி உயா் நீதிமன்றத்தை நாடியுள்ளது.