‘இது மிகவும் நல்ல முடிவு’: கேரள அமைச்சரவை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷைலஜா டீச்சர்
கேரள அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது மிகவும் நல்ல முடிவு என அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது மிகவும் நல்ல முடிவு என அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் அக்கட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் மற்றும் தற்போது கரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முந்தைய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படாததற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்த நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவை அவர் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “புதிய அமைச்சரவை வருவது நல்லது. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடைசியாக என்னை அமைச்சராக்க கட்சி முடிவு செய்தது. இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். ஆனால் இன்னும் பலரும் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “எல்லோரும் தங்கள் துறைகளில் கடுமையாக உழைத்தனர். ஆனால் நான் மட்டுமே தொடர வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது. என்னைப் போன்ற இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களாலும் கடினமாக உழைக்க முடியும். இது மிகவும் நல்ல முடிவு” என வரவேற்றுள்ளார்.
"கேரளத்தில் இடது முன்னணி பெற்றது ஒரு வரலாற்று வெற்றி. இது ஒரு நல்ல அறிகுறி. சமுதாயத்தில் நாம் பல மாற்றங்களைச் செய்ய முடியும். வரவிருக்கும் இடது முன்னணி அரசும் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட பணியாற்றும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.