அஇஅதிமுகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கடந்த நவமபர் 24ஆம் தேதி அஇஅதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்பன குறித்தும், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தகவலகள் வெளியாகின.
இந்நிலையில் நாளை (டிச.1) அதிமுகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பாஜகவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் இணைந்தது, சசிகலாவை கட்சியில் இணைப்பது, வேதா இல்லம் அரசுடைமையாக்கியது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.