சென்னையில் உள்ள லயோலா கல்லூரி கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் லயோலா கல்லூரி 99 ஆண்டு குத்தகைக்கு கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாகவும், அந்தக் குத்தகை 2021ஆம் ஆண்டு நிறைவடைவதால் மீண்டும் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் எனவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவின.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா
இந்நிலையில் இதுதொடர்பான ஆய்வுக்குப் பின் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “சமூக வலைத்தளங்களில் லயோலா கல்லூரி கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கல்லூரி கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு இதனை வருவாய் துறையினரும் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.