அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் முன் இருந்த பழமையான அரசமரம் புதன்கிழமை சாய்ந்து விழுந்ததால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் தேர்த்திருவிழா உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோயில் நுழைவாயில் முன், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரத்தடியில் விநாயகர் கோயிலும் உள்ளது.
முறிந்து விழுந்த 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கருவலூர் மாரியம்மன் கோயில் நுழைவாயில் முன்பு இருந்த அரசமரம்.
இந்நிலையில், விநாயகர் கோயில் அரசமரம் திடீரென பிளவு ஏற்பட்டு புதன்கிழமை முறிந்து சாய்ந்து விழுந்தது. இதில் விநாயகர் மேடை பின்வரும் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையும் சாய்ந்தது.
இதையும் படிக்க | பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் முதல்வரிடம் மனு
தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த அரச மரத்தடி விநாயகர் மேடையில் அமர்ந்திருப்பது வழக்கம். அதிர்ஷ்டவசமாக அரசமரம் முறிந்து சாய்ந்து விழும் போது யாரும் அங்கு இல்லாதது, கருவலூர் மாரியம்மன் அருள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் பழமையான அரசமரம் முறிந்து சாய்ந்து விழுந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து முறிந்து சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தவும், மீதமுள்ள மரத்தை பாதுகாப்பது குறித்தும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.