மேட்டூர் அணை நீர் மட்டம் 5 நாள்களில் 10 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105.14 அடியாக உயர்வு. அணையின் நீர் மட்டம் 5 நாட்களில் 10 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 5 நாட்களில் 10 அடி உயர்வு அணையின் நீர் மட்டம் 105.14 அடியாக உயர்வு.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் காவிரியின் துணை நதியான பாலாறு, தொப்பையாறு மற்றும் சின்னாறு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 22-ஆம் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,477 கனஅடிவீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கு வினாடிக்கு 40,000 கனஅடிவரை அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு மழை சற்று தணிந்தது அணைக்கு வரும் நீரின் அளவு 37, 162 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 71.66 டி.எம்.சியாக இருந்தது. கடந்த 22-ஆம் தேதி 95.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 105.14 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.
நேற்று காலை 102.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 105.74 அடியாக உயர்ந்ததால் ஒரேநாளில் அணையின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருவதாலும் நீர்வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் மேட்டூர் அணை இரண்டு வாரகாலத்தில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. நீர்வத்தை பொறுத்து அணை நிரம்பும் காலம் அதிகரிக்கவே குறையவோ வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடப்பு நீர்ப்பாசன ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.