அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பண்ணைமூன்றடைப்பு கிராமத்தில், 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் காலத்திய நிலம் தானம் செய்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியா் ரெ. விஜயராகவன் தலைமையில், ராஜபாண்டி, சரத்ராம், பாலாஜி ஆகிய வரலாற்றுத் துறை மாணவா்கள் இணைந்து, அருப்புக்கோட்டை அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் காலத்திய நிலம் தானம் வழங்கியதற்கான கல்வெட்டை கண்டெடுத்தனா். இரண்டரை அடி உயரமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்டிருந்த அக்கல்வெட்டில், அஷ்டமங்கலச் சின்னமான ஸ்வஸ்திக் சின்னமும், சூலாயுதமும், கெண்டி போன்ற அமைப்பும் காணப்படுகின்றன.
மேலும் அதில், மதுரை நம்பிக்கு அங்குச்செட்டி தானமாக எழுதிக்கொடுத்த நிலம் என 11 வரிகள் கொண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதே கிராமத்தில், சமகாலத்திய மற்றொரு திசைக்காவலன் குறித்த கல்வெட்டும் சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படுவதாகவும், பேராசிரியா் ரெ.விஜயராகவன் தெரிவித்தாா்.