மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
காலையில் கோயில் பெண்ணடி மக்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து மூலவர் காமாட்சி அம்மனுக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் மண்டபத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர். அப்போது திருவிளக்கு பூஜைக்கன நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர்.
திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்.
இப் பூஜையில் மங்கள ஆரத்தி முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனைகள் நடைபெற்று திருவிளக்கு பூஜை நிறைவடைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் கே.நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பி. ஏ.நாகராஜன், எஸ்.பி.எம். அன்புக்குமார், அ.கி.சு. யாழ் முருகன், கி.செ. முத்துப்பாண்டியன், இரா.திருஞானம், கா.மகா. சரவணன், ம.இராஜா, பி.பழனியப்பன் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.