தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அன்னூர் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் சனிக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழிச் சந்தையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
அன்னூர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்த ஆட்டுச் சந்தையில் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
வழக்கமாக ரம்ஜான் பண்டிகை காலத்தில் களைகட்டும் அன்னூர் ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சனிக்கிழமை அதிகாலை வழக்கம்போல் ஆட்டுச் சந்தை கூடியது. வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக கவலை தெரிவித்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஒரு நபர் ரூ.49 ஆயிரத்துக்குள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் நிலை உள்ளதால், அன்னூர் ஆட்டுச்சந்தையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.