முகப்பு
தமிழ்நாடு

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது தொடர்பாக....

Updated On : 17 மார்ச் 2026, 3:45 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை ரூ. 23 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவித்தார். மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறினார்.

Advertisement

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு சரியாக 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினைச் சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூபாய் 40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும்.

வேட்பாளரின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரமாக கண்காணித்திட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை / நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை. சுங்கத் துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.

தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள், 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை (17/03/2026) ரூபாய் 23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.

பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி இன்று (17.03.2026) வரை தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி காலம் சென்ற / மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவேண்டியதில்லை என்றும் தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவைகள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன் மறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும்பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், இத்தொகை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்து செல்லப்படும் தொகை இல்லை என்று தணிக்கை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். பின்பு அத்தொகை உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும். பறிமுதல் செய்யப்படமாட்டாது. இதுகுறித்து முறையீடு ஏதும் இருப்பின் மாவட்ட குறைதீர் குழுவிடம் (District Grievance Committee) முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

TN election: Rs 23 crore in cash and gift items seized in Tamil Nadu in two days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.