தாயை கொலை செய்த மகன் கைது
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மதுபோதையில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை புதன்கிழமை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மதுபோதையில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை புதன்கிழமை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்த ஞானதீபம் மனைவி புளோடில்டா(66). இவர்களுக்கு ஸ்டாலின், ராஜா, ஜெயன்(40), ஜான்சி என்ற 4 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், புளோடில்டா தனது கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது மகன் ராஜாவுடன் வசித்து வந்தார். இவரின் மூன்றாவது மகனான ஜெயன் இரவு நேர புரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயன் மதுபோதையில், தனது தாய் வீட்டிற்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாய் வீட்டிற்கு வந்த ஜெயன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் ஜெயன் கத்தியால் புளோடில்டாவை குத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வடபாகம் போலீசார் புளோடில்டாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை மதுபோதையில் மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.