நாட்டில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தென்மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (நோட்டோ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி தெரியவந்துள்ளது.
2023-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 221 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 70 இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாகவும், கர்நாடகத்தில் 35, மகாராஷ்டிரத்தில் 33, குஜராத் 29, தெலங்கானா 15 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றதாக நோட்டோ வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய தலைநகரான தில்லியில் 14 உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரிப்பதற்கான காரணம், இறந்தவர்களின் உறுப்பை தானமாகக் கொடுப்பதற்கு முன்வருவதே என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 2023-ல் மொத்தம் இறந்த 1,099 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக தெலங்கானாவில் 252 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதாகவும், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் தலா 178 பேரின் உறுப்புகளும், மகாராஷ்டிரத்தில் 148, குஜராத்தில் 146 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதாக அறிக்கையில் பதிவாகியுள்ளன.
இதய மாற்று அறுவைச் சிகிச்சை என்பது பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் இதயத்தை அகற்றி, ஆரோக்கியமானவரிடம் இருந்து தானமாகப் பெற்ற இதயத்தை பொறுத்துவதாகும்,
கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை உயிருள்ள ஒருவரால் உறுப்பு தானம் செய்ய முடியும், ஆனால் மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிருடன் உள்ள ஒருவரால் மட்டுமே இதய தானம் செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.