ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று(ஆக. 9) நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) ஜூலை 5-இல் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக இதுவரை 21போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபராக கருதப்பட்ட ரெளடி திருவேங்கடம் ஜூலை 14-இல் காவல் துறையின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் தற்போது அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அவா்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்துவதுடன், அவருடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று (ஆக. 9) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், இப்போராட்டத்தில் இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் தீனா உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்ட 1500 மீது, அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.