நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது!
ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் பொன்னுசாமி கைது.
நாமக்கல்: நில அபகரிப்பு வழக்கில், திருச்செங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் பொன்னுசாமி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் எட்டிக்கண்(72). இவர், கடந்த 1983–ஆம் ஆண்டு காதப்பள்ளி கிராமத்தில் 5.82 ஏக்கர் நிலத்தை பழனியாண்டி என்பவரிடமிருந்து கிரையம் செய்துள்ளார்.
அதன்பிறகு, 2023–இல் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி சாந்தி பெயருக்கு, எட்டிக்கண், அவரது மனைவி எட்டம்மாள், மகன் வேலுசாமி ஆகியோர் நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பவர் ஆப் அட்டர்னி செய்து கொடுத்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், 5.82 ஏக்கரில் 8,400 சதுர அடி நிலத்தை சாந்தி, திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி கணவர் பொன்னுசாமிக்கு விற்பனை செய்து விட்டார்.
சில மாதங்களில் சாந்தி இறந்துவிடவே, அவர் பெயரில் எட்டிக்கண் பதிவு செய்த பவர் ஆப் அட்டர்னி ரத்தாகி விட்டது. இதன்மூலம் மீண்டும் எட்டிக்கண் பெயருக்கு 5.82 ஏக்கர் நிலமும் வந்துவிடும். எட்டிக்கண், எட்டம்மாள், வேலுசாமி பெயரில் உள்ள அந்த நிலத்தை, முன்னாள் எம்எல்ஏவின் கணவரான பொன்னுசாமி, உண்மையான நில உரிமையாளர்களின் புகைப்படத்தை மாற்றி ஆள்மாறாட்டம் மூலம் புதியதாக பவர் ஆப் அட்டர்னி செய்து நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். மேலும், அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்திலும் பதிவு செய்து டிடிசிபி உரிமம் பெற்றுள்ளார். நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான எட்டிக்கண், எட்டம்மாள், வேலுசாமி ஆகியோரின் வாழ்வு சான்றிதழ்கள்(அதேபெயரில் நபர்கள் வேறு) போலியாக தயார் செய்யப்பட்டுள்ளன.
தன்னிடம் கார் ஓட்டுநராக உள்ள சந்திரசேகருக்கு 7,200 சதுர அடி நிலத்தை பொன்னுசாமி கிரயம் செய்து கொடுத்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார் எனவும், மேலும் தங்களது கைரேகை இல்லாமல், பெயரை மட்டும் பயன்படுத்தி மோசடியாக 50–க்கும் மேற்பட்ட ஆவணங்களை தயாரித்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் எட்டிக்கண், வேலுசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.
எட்டிக்கண் மனைவி எட்டம்மாள் இறந்து விட்டார். அதன்பேரில், முன்னாள் எம்எல்ஏ கணவர் பொன்னுசாமி, ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட அனுராதா, சந்திரசேகரன், நந்தகுமார், பழனிசாமி, ஆவண எழுத்தர் ரவிகுமார், முருகேசன், ரவிச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் முதல் நபரான பொன்னுசாமி தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் பதுங்கி இருந்த பொன்னுசாமியை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.