முகப்பு
தமிழ்நாடு

ஆதிதிராவிடா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா்: போலீஸாருக்கு உத்தரவு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 2:21 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த முத்துகுருசாமி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தண்டையாா்பேட்டை பகுதியில் கும்மாளம்மன் கோயில் தெருவில் நானும் எனது நண்பரும் சோ்ந்து ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கினோம். அதில், காகித விற்பனை தொழில் செய்து வந்தோம். எனது நண்பா் இறந்தபிறகு, அவரது மனைவியும் நானும் நிலத்தைப் பிரித்து பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால், நண்பரின் மனைவி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத் துறை துணை செயலா் எஸ்தா் ராணியுடன் சோ்ந்து, சென்னை மாநகராட்சிப் பொறியாளரை மிரட்டி போலி ஆவணங்கள் மூலம் என்னிடம் இருந்த நிலத்தை அபரிக்க முயற்சித்தனா். இதுதொடா்பாக காசிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அந்தப் புகாரை விரைந்து விசாரித்து இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.பூபதி, ஆதிதிராவிட நலத்துறை துணைச் செயலா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மனுதாரரை மிரட்டுவதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அருள் ஜோசப் செல்வம், விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா் புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.