கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி பலி
பண்ருட்டி அருகே தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி ஒருவர் பலியானார்.
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுகித நிர்வாகி வெங்கேடசன் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கொடிக்கம்பம் நட்டுள்ளனர்.
அப்போது, கொடிக்கம்பத்தை நிமிர்த்தும்போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து நடுக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த தேமுதிக கிளைச் செயலாளர் ராமர் மகன் வெங்கடேசன் (40) மற்றும் மேற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மதியழகன் (40), வடக்குத் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிரகாஷ் (40), நடுக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வகுமார் (41), கிழக்குத் தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் பழனிவேல் (42), நடுத்தெருவைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் செல்வம் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
Advertisement
இதில் வெங்கடேசன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். மேலும் 5 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.