முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்விக்கு நிதி ஒதுக்காத மோடி அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் பள்ளிகளில் செலுத்தப்படும் எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்காத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 6:17 AM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் செலுத்தப்படும் எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்காத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

'ஒரே வார்த்தையில் அழைத்தோம் - மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன் ? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், மிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' - என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திமித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தற்போதைய மத்திய அரசு, இனியாவது மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.