FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர் கனமழை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 டிசம்பர் 2024, 10:31 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்ததை அடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் 50 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசியது.

அதையடுத்து புதுச்சேரி பிராந்தியம், விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்த புயல், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

தற்போது கடலூருக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், புயல் கரையை கடந்துவிட்டாலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தொடர் கனமழை மற்றும் பாதிப்பு காரணமாக பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை திங்கள்கிழமை(டிச.2) நடைபெற இருந்த தேர்வுகள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை (டிச.2) நடைபெறுவதாகவிருந்த பருவத் தோ்வுகள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை திங்கள்கிழமை(டிச.2) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகம்

பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற இருந்த தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், தோ்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலை தோ்வாணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments