முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் 20 பசுக்கள் மர்மச் சாவு! கண்டித்துக் கடையடைப்பு!

பஞ்சாபில் மர்மமான முறையில் 20 பசு மாடுகள் பலியானதைப் பற்றி...

Updated On : 9 டிசம்பர், 2024 at 11:22 AM
- கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப்: கபூர்தலா மாவட்டத்திலுள்ள பக்வாரா எனும் ஊரிலுள்ள பண்ணையில் 20 பசுமாடுகள் மர்மமான முறையில் பலியாகியுள்ளன. மேலும், 28 மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன.

பக்வாராவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான மாட்டுப்பண்ணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 20 பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. மேலும், 28 பசுக்கள் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றன.

மாடுகள் பலியான சம்பவம் குறித்த செய்தி காட்டுத்தீப்போல பரவியதால் ஏராளமான அமைப்புகள் பக்வராவில் திரண்டனர்.

Advertisement

இந்தச்சம்பவம் குறித்து பக்வரா காவல்துறை அதிகாரி ரூபிந்தர் கவுர் பட்டி கூறுகையில், பசு மாடுகள் பலியானதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை எனவும், இதற்காக குரு அங்காத் தேவ் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து கால்நடை மருத்துவ குழுவொன்று வரவழைக்கப்பட்டு இறந்த மாடுகளின் உடல்களில் கூராய்வு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்தச் சோதனையின் அறிக்கை வெளியான பின்னரே அவை இறந்ததிற்கான காரணம் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

மேலும், அந்தப் பண்ணையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி இது யாரேனும் திட்டமிட்டு செய்த சதி செயலா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அவ்வாறு எதுவும் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் பசுக்களுக்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவமளித்து வரும் நிலையில் அந்த பண்ணையின் மேலாளர் சத்னம் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், மிருகவதைத் தடைச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர்களும் பாஜக தலைவர்களுமான சோம் பிரகாஷ் மற்றும் விஜய் சம்பாலா மற்றும் ஆம் ஆத்மி எம்பி ராஜ் குமார் சப்பேவால் ஆகியோர், அப்பண்ணையை பார்வையிட்டனர்.

மர்மமான முறையில் பசுக்கள் இறந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்வாராவில் ஹிந்துத்துவ அமைப்பினரினால் கடையடைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூரில் அனைத்து கடைகளும் சந்தைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், சிவசேனா உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்பினர் சில சமூகவிரோதிகள் இறந்த பசுக்களுக்கு விஷம் வைத்துவிட்டதாகவும் அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments