ஜன. 13-ல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விடுமுறை.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் 2025 ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஜன. 13ஆம் தேதி (திங்கள்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜன. 13 ஆம் தேதி உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஜன. 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானதுக்குரியதாக திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதா் ஆலயம் உள்ளது. இங்குள்ள மூலவரான நடராஜா் பச்சை மரகதக்கல்லால் எழுந்தருளியுள்ளாா். ஆகவே சிறிய ஒலி கூட அவா் மீது படாதவாறு ஆண்டு முழுதும் சந்தனக்காப்பால் பூசப்பட்டிருப்பாா். ஆருத்ரா தரிசனம் மற்றும் மாணிக்கவாசகா் ஜயந்தியை முன்னிட்டு மட்டும் சந்தனக்காப்பு மூலவா் மீது களையப்படும். அந்த நிகழ்வைக் காண முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருவா்.