கோழிக்கோடு: பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக கேரளம் மாநிலம், கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
91 வயதான எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் பிரபல எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் வெளியானது.
மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த வாசுதேவன் நாயர், பத்ம பூஷண் விருது, இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, கேரள அரசின் கேரள சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, வள்ளலார் விருது, எழுத்தச்சன் விருது, மாத்ருபூமி இலக்கிய விருது, ஓ.என்.வி. இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் சுமார் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் ஏழு படங்களை இயக்கியுள்ளார். அவரது மகள் அஸ்வதி நாயர் திரையுலகில் கிரியேட்டிவ் இயக்குநராக உள்ளார். வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித் பாலகிருஷ்ணன், ஜெயராஜ், ஷியாமபிரசாத், மகேஷ் நாராயணன் மற்றும் ரதீஷ் அம்பாட் ஆகியோர் படங்களாக இயக்கியுள்ளனர்.
பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை(டிச.16) கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு இதயநோய் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் உள்பட பல்துறை நிபுணர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தேவையான உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.