முகப்பு
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்!

காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 38 பேர் பலியானதைப் பற்றி..

Updated On : 22 டிசம்பர், 2024 at 9:56 AM
கோப்புப்படம்
பகிர்:

காங்கோ நாட்டில் அதிகப்படியான நபர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

வடகிழக்கு காங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிகிழமை (டிச.20) போண்டே எனும் இடம் வரையில் பயணம் செய்யும் படகில் சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளனர். அப்போது நடு வழியில் அந்த படகு கவிழ்ந்துள்ளது. இதில் 38பேர் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகில் பயணம் செய்த பெரும்பாலானோர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் எனவும் அவர்கள் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தாதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அந்த பயணப்படகு இரண்டு முக்கிய நகரங்களில் நிறுத்தங்களைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இதேப்போன்ற ஒரு பயணப்படகு கவிழ்ந்ததில் 78பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

பயணப்படகுகளில் அதிக நபர்களை ஏற்றக்கூடாது எனவும் மீறினால் தண்டனை அளிக்கப்படும் எனவும் காங்கோ நாட்டு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் இதுப்போன்ற படகு விபத்துகள் அந்நாட்டில் நிகழ்வது தொடர்கதையாகி வருகின்றது.

மேலும், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையே தொடர் மோதல்கள் ஏற்பட்டு வருவதினால், பெரும்பாலான சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு செல்ல அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →