உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், "போலே பாபா' என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
"போலே பாபா'விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஹத்ராஸில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள்.
இதனிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பிஎன்எஸ் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் உத்தரபிரதேச காவல்துறை புதன்கிழமைவழக்குப்பதிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை சிக்கந்தர ராவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பிற அமைப்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹாத்ரஸ் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தினை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை நேரில் பார்வையிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.