வேங்கைவயல் சம்பவத்தில் ஒருவர்கூட கைது செய்ய முடியாதது ஏன்? - உயர் நீதிமன்றம்
வேங்கைவயல் சம்பவத்தில் ஒருவர்கூட கைது செய்ய முடியாதது ஏன்? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேங்கைவயல் சம்பவத்தில் ஒருவர்கூட கைது செய்ய முடியாதது ஏன்? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்தது 2022, டிசம்பா் 26-ஆம் தேதி தெரியவந்தது. தற்போது இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தற்போது விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் குரல் மாதிரிப் பரிசோதனை, மரபணு பரிசோதனை என பல வகைகளில் முயற்சித்தும் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவள்ளூா் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீஸாா் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனா். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலா் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக விசாரிக்க, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வேங்கைவயல் தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது எனவும், ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி, வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன்? என்று தமிழக காவல் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், இரண்டு வாரங்களில் இறுதி முடிவை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.