முகப்பு
தற்போதைய செய்திகள்

அஸ்ஸாம் வெள்ளம்: 27 மாவட்டங்களில் 14.39 லட்சம் பேர் பாதிப்பு, பலி 84 ஆக உயர்வு

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு புதன்கிழமை 5 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 11 ஜூலை, 2024 at 4:44 AM
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேரிடர் மீட்புப் படையினர்.
பகிர்:

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு புதன்கிழமை 5 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. 27 மாவட்டங்களில் 14.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 86 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2580 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1.57 லட்சம் பேர் இன்னும் 365 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் நேமாதிகாட், தேஜ்பூர், குவஹாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவை தாண்டி பாய்கிறது.

Advertisement

அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, காஸிரங்கா தேசியப் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 233 வன முகாம்களில் 95 வன முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு இதுவரை ஒன்பது காண்டாமிருகங்கள் உட்பட 159 வன விலங்குகள் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காஸிரங்கா தேசிய பூங்காவின் கள இயக்குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காஸிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலங்குகள் வெள்ளம் காரணமாக இறந்துள்ளன.

"159 வனவிலங்குகளில், 128 பன்றி மான்கள், 9 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள், 2 மான்கள் மற்றும் 2 சாம்பார் மான்கள் வெள்ள நீரில் மூழ்கி இறந்தன. மறுபுறம், 12 பன்றி மான்கள், ஒரு மான், ரீசஸ் மக்காக் மற்றும் நீர்நாய்க்குட்டி ஆகியவை பராமரிப்பின் கீழ் இறந்தன. இரண்டு பன்றி மான்கள் வாகனம் மோதி இறந்தன, பிற பாதிப்பு காரணங்களால் ஒரு நீர்நாய் (குட்டி) இறந்தது" என்று சோனாலி கோஷ் கூறினார்.

பூங்கா நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து வெள்ளத்தின் போது 133 விலங்குகளை மீட்டு, 111 விலங்குகள் சிகிச்சைக்குப் பின் மீட்கப்பட்ட்டுள்ளன.

இரண்டு காண்டாமிருகக் குட்டிகள் மற்றும் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட மீட்கப்பட்ட ஏழு விலங்குகள் இப்போது சிகிச்சையில் உள்ளன" என்று சோனாலி கோஷ் கூறினார்.

தற்போது பூங்கா வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டு வருகிறது, ஆனால் பூங்காவில் உள்ள 62 வன முகாம்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மற்றும் 4 முகாம்கள் காலி செய்யப்பட்டுள்ளன.

காஸிரங்கா தேசியப் பூங்காவின் மையப் பகுதி 430 சதுர கி.மீ., மேலும் சில

பகுதிகளைச் சேர்த்ததைத் தொடர்ந்து பூங்காவின் பரப்பளவு அதிகரித்துள்ளது. காசிரங்காவில் 2600-க்கும் மேற்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்ரகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீட்புக் குழுக்கள் என அனைத்து பிரிவினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மழை குறைந்து வெள்ள நீர் வடியத் தொடங்கியுருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments