விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் 9 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 33,353 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், ஏழாவது சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா 24,169 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். வெற்றியை நோக்கி திமுக வேட்பாளர் முன்னேறி வருகிறார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை10-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஜூன் 10-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.
ஜூன் 14-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூலை 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தொடர்ந்து 15 நாள்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்றதேர்தல் பிரசாரம் ஜூலை 8-ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், ஜூலை 10-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவானது.
இந்த நிலையில், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி, தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அஞ்சல் வாக்குகள் கொண்ட பெட்டி எடுக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகளைக் கொண்ட பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் பிரிக்கப்பட்டு, 50 எண்ணிக்கை கொண்டு கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 150 பேர் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 9 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 33,353 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்பதாம் சுற்று முடிவுகள் வெளியான நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா 57,483 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 24,130 வாக்குகளும், நாதக வேட்பாளர் பொ.அபிநயா 4,187 வாக்குகளும் பெற்றுள்ளனர். , நோட்டாவுக்கு 394 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதேபோன்று நாட்டில் ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்று இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னிலையில் இருந்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தார் மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.