முகப்பு
தற்போதைய செய்திகள்

பெஞ்சமின் நெதன்யாகு - கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அமைப்புகளுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.

Updated On : 26 ஜூலை, 2024 at 7:34 AM
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு - அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
பகிர்:

வாஷிங்டன்: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அமைப்புகளுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.

அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினருடனான போரில் ‘முழுமையான வெற்றி’ கிடைக்கும் வரை அந்தப் போரை தொடா்ந்து நடத்துவோம். இருந்தாலும், இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அமைப்புகளுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் போா் நாகரீகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலானது. இந்தப் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோா் ஈரானால் பயன்படுத்திக்கொள்ளப்படும் கைப்பாவைகள். காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதிபா் ஜோ பைடன் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்கு பின்னர் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க துணை அதிபர்

கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு.

இந்த சந்திப்பின் போது ஹமாஸ் அமைப்பினருடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார் கமலா ஹாரிஸ், இதனால் ஹமாஸ் அமைப்பால் காஸாவில் உள்ள பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளோர் தாயகம் திரும்ப முடியும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹாரிஸ் எக்ஸ் சமூக வலைதள பக்க பதிவில், நெதன்யாகுவுடன் வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் உரையாடியதாகவும்,

அதில் அவர் இஸ்ரேலின் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தினார், மேலும் ஒன்பது மாதப் போரில் காஸாவில் அதிக இறப்பு எண்ணிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார் என ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹாரிஸ் இருக்கக்கூடும்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, நெதன்யாகுவிடம் காஸா மீதான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவரவும், பிணைக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வந்து போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நெதன்யாகு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை வெள்ளிக்கிழமை புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ கிளப்பில் சந்தித்து பேசவுள்ளார்.

டொனால்ட் டிரம்ப், நெதன்யாகுவைச் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்பு, காஸா மீதான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், பிணைக் கைதிகளை திரும்பப் பெறவும் அழைப்பு விடுத்தார், இஸ்ரேல் தனது "பொது உறவுகளை" சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை விமர்சித்த டிரம்ப், அமெரிக்க கொடியை அவமதித்ததற்காக அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனியே, காஸா மீதான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இதுதொடர்பாக நெதன்யாகுவுடன் தொடர்ந்து பைடன் வலியுறுத்தி வருவதாகவும், வரும் வாரத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

நெதன்யாகுவின் அமெரிக்க நாடாளுமன்ற உரைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, அமெரிக்காவுக்கு நெதன்யாகு சென்றுள்ளது, போா் விவகாரத்தில் தனக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்ளத்தான். அவா் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமரச நடவடிக்கைகள் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.பிணைக் கைதிகளை திரும்ப அழைத்துவருவதற்கான பேச்சுவாா்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அவா் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியது முழு பொய் என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →