இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்தது குறித்து...
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அன்று தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இன்று லெபனான் அதிபர் அவுன் செல்போன் வாயிலாக உரையாடியதாகவும்; அப்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால், லெபனான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில், நெதன்யாகுவுடன் உரையாடுவது ஏற்புடையதாக இருக்காது என்பதால் அதிபர் அவுன் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளின் தலைவர்களிடையே நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வது குறித்து இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 260 பெண்கள் மற்றும் 172 குழந்தைகள் உள்பட 2,196 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.