வால்பாறையில் வீட்டின் சுவர் இடிந்ததில் பாட்டி - பேத்தி பலி!
வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி மற்றும் பேத்தி ஆகிய இருவர் பலியாகினர்.
வால்பாறையில் நேற்று(ஜூலை 29) இரவு முழுவதும் பெய்த கனமழையால் இன்று வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை இடது கரை பக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி தனப்பிரியா ஆகிய இருவரும் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பாட்டியை மற்றும் பேத்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர்கள் இறந்ததாகக் கூறினார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாட்டி மற்றும் பேத்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.